விநாயகர் கவசம் தமிழில் | Vinayagar Kavasam Tamil | English lyrics

திருச்சிற்றம்பலம்

வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு
விநாயகர் காக்க, வாய்ந்த சென்னி
அளவுபடா அதிக சவுந்தர தேக
மகோற்கடர்தாம் அமர்ந்து காக்க
விளரற நெற்றியை என்றும் விளங்கிய
காசிபர் காக்க, புருவம் தம்மைத்
தளர்வில் மகோதரர் காக்க
தடவிழிகள் பாலசந்திரனார் காக்க (1)

கவின் வளரும் அதரம் கஜமுகர்
காக்க, தாலம் கணக்கிரீடர் காக்க
நவில் சிபுகம் கிரிசை சுதர் காக்க
நனி வாக்கை விநாயகர்தாம் காக்க
அவிர் நகை துன்முகர் காக்க
வளரெழில் செஞ்செவி பாசபாணி காக்க
தவிர்தலுறாது இளங்கொடிபோல் வளர்மணி
நாசியைச் சிந்திதார்த்தர் காக்க (2)

காமுரு பூமுகம் தன்னைக் குணேசர்
நனி காக்க, களம் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்கு
கந்த பூர்வஜர்தாம் மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கினவிநாசர்
காக்க, இதயம் தன்னைத்
தோமகலும் கணநாதர் காக்க, அகட்டினைக்
துலங்கு ஏரம்பர் காக்க (3)

பக்கம் இரண்டையும் தராதரர் காக்க
பிருட்டத்தைப் பாவம் நீக்கும்
விக்கினகரர் காக்க, விளங்கி லிங்கம்
வியாளபூடணர்தாம் காக்க
தக்க குய்யம் தன்னை வக்கிரதுண்டர்
காக்க, சகனத்தை அல்லல்
உக்க கணபர் காக்க, ஊருவை
மங்கள மூர்த்தி உவந்து காக்க (4)

தாழ் முழந்தாள் மகாபுத்தி காக்க
இருபதம் ஏகதந்தர் காக்க
வாழ்கரம் க்ஷிப்ரப்ரசாதனர் காக்க
முன் கையை வணங்குவார் நோய்
ஆழ்தரச் செய் ஆசாபூரகர் காக்க
விரல் பதும அத்தர் காக்க
கேழ் கிளரும் நகங்கள் விநாயகர் காக்க
கிழக்கினில் புத்தீசர் காக்க (5)

அக்கினியில் சித்தீசர் காக்க
உமாபுத்திரர் தென்றிசை காக்க
மிக்க நிருதியில் கணேசுரர் காக்க
விக்கின வர்த்தனர் மேற்கென்னும்
திக்கதனில் காக்க, வாயுவில்
கஜகன்னர் காக்க, திகழ் உதீசி
தக்க நிதிபர் காக்க
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க (6)

ஏகதந்தர் பகல் முழுதும் காக்க
இரவினும் சந்தி இரண்டன் மாட்டும்
ஒகையில் விக்கினகிருது காக்க
இராக்கதர் பூதம் உறு வேதாளம்
மோகினிப் பேய் இவையாதி உயிர்த்திறத்தால்
வரும் துயரும் முடிவிலாத
வேகமுறு பிணிபலவும் விலக்குபு
பாசாங்குர்தாம் விரைந்து காக்க (7)

மதி, ஞானம், தவம், தானம், மானம், மொழி
புகழ், குலம், வண்சரீரம், முற்றும்
பதிவான தனம், தானியம், கிருஹம்,
மனைவி, மைந்தர் பயில் நட்பாதி
கதி யாவும் கலந்து சர்வாயுதர் காக்க
காமர் பவுத்திரர் முன்னான
விதியாரும் சுற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க (8)

வென்றி ஜீவிதம் கபிலர் காக்க
கரியாதி எனாம் விகடர் காக்க
என்று இவ்வாறு இதுதனை முக்காலமும்
ஒதிடின் நும்பால் இடையூறு ஒன்றும்
ஒன்றுறா ! முனிவராகாள் அறிமின்கள் !!
யாரொருவர் ஓதி னாலும்
மன்ற ஆங்கு அவர் தேகம் பிணியற
வச்சிர தேகம் ஆகி மின்னும் (9)

பக்தியுடனே இந்தக் கவசத்தைப் பாராயணஞ் செய்பவர்களுக்குப் பிணியும், வறுமையும், பேய் பூதங்களாலுண்டாகின்ற பல துன்பங்களும், கவலைகளும், பாபம் முதலியவைகளும் நீங்கும். பெருஞ்செல்வமும், தீர்க்காயுளும், களத்திர புத்திரமித்ராதிகளும் உண்டாகும். இதைப் படித்தாலும், ஒருவர் சொல்லக் கேட்டாலும், பூசித்தாலும், எப்படிப்பட்ட துன்பமும் நீங்கும்.

திருச்சிற்றம்பலம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள்

வலம்புரி, வலம்புரி விநாயகர், ஸ்வஸ்திகம் நந்தியாவர்த்தம்

தைப்பொங்கல்