தைப்பொங்கல்

தைப்பொங்கல்

பொங்கல் அன்று சுப நேரம் 

http://www.tamildailycalendar.com/ இலிருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

 தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல் வரலாறு

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

உழவர் திருநாள்

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

போகி

  • பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். [மார்கழி] கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.
  • போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

மாட்டுப் பொங்கல்

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்கலை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.

பொங்க வைக்கும் முறை

தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.

பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.


பொங்கலை ஒத்த பிற விழாக்கள்

மேற்குநாடுகளில் பொங்கல் போன்றே ஒரு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.

சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை
----------------------------------------------------------------------------------------------------------------------------

 http://www.blogtopsites.com/outpost/a699728d5c3bc641e9e56d76deaaeab9 இலிருந்து

தை பொங்கல்

கதிரவனின் சுழற்சியை கொண்டு வகுக்கப்பட்ட தினத்தை வைத்து கொண்டாடப்படும் ஒரே பண்டிகை "பொங்கல்"தான் என்று சொல்லலாம். உத்ராயனத்தின் முதல் தினமாக "பொங்கல்கொண்டாடப்படுகிறது. உத்தராயணம், கதிரவன் வடக்கு நோக்கி பயணிக்கும் நாட்கள். நமது கலாச்சாரத்தில் உத்தராயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. "மகர சங்கராந்தி' என்று அழைக்கப்படும் பொங்கல் தினம், சூரியன் மகர ராசியில் நுழையும் நாள். அனைத்து இந்து ஆலயங்களிலும் மணியோசையுடன் சங்கு முழக்கத்துடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. புது மண் சட்டியில் பொங்கல் பொங்க, "இந்த வருடம் இல்லை பஞ்சம்" என்பதை மகிழ்ச்சி பொங்க முழங்குகிறார்கள். பொங்கலுடன் சேர்ந்து, இனிப்புகளும், செங்கரும்பும் சேர்ந்து அறுவடைதிருநாளை அமோகமாக வரவேற்று, வரும் விருந்தினர்களுக்கு உணவு படைத்து மகிழ்வதே இத்திருநாளின் சிறப்பாக அமைகிறது. விவசாயிகள் சூரியக்கடவுளை நன்றியுடன் வணங்கி, தமக்கு உதவிய காளைகளுக்கு கொம்பில் வர்ணம் பூசி, அழகு படுத்தி பூஜை செய்கிறார்கள். பொங்கலுக்கு முந்திய தினமான "போகி" அன்று 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதற்கு இலக்கணமாக பழைய பொருள்களை தீயிலிட்டு, புதிய பொருட்களை வாங்கி பொருளாதாரம் மேம்பட செய்கிறார்கள். "பொங்கல்" பொங்கும்போது குடும்பமே கூடி, "பொங்கலோ பொங்கல்" என்று கூவி மகிழ்கிறார்கள். கிழக்கே பொங்கும் பொங்கல் மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. "வெண் பொங்கல், சர்க்கரைப்பொங்கல்" என்று இரு வகை பொங்கல் படைத்து வணங்குகிறார்கள். பொங்கலுக்கு மறு தினம் "மாட்டு பொங்கல்" தினமாக கொண்டாடப்படுகிறது. "ஜல்லிக்கட்டு" தினமான அன்று இளம் வாலிபர்கள் சீறி வரும் காளைகளை அடக்கி தம் வீரத்தை வெளிப்படுத்துகிறார்கள். "பொங்கல் பண்டிகையின் கடைசி தினம் "காணும் பொங்கல்" இந்த நாளன்று, தமது உறவினரையும், நண்பர்களையும் கண்டு மகிழ்கிறார்கள்.

 


 



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள்

வலம்புரி, வலம்புரி விநாயகர், ஸ்வஸ்திகம் நந்தியாவர்த்தம்